பயிர் சாகுபடிக்காக தூத்துக்குடிக்கு ரெயிலில் 850 டன் யூரியா வருகை

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3,000 டன் யூரியா, 2,700 டன் டிஏபி, 3,200 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 65,000 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்களின் விதைப்பு பணி நிறைவுற்று, தற்போது மேல் உரம் இட வேண்டிய பருவத்தில் உள்ளது. மேலும் வாழை, நெல்லுக்குத் தேவையான உரங்கள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நவம்பர் மாத ஒதுக்கீட்டின் படி பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி 850 மெட்ரிக் டன் யூரியா, 220 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் நேற்று ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்தனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர மற்றொரு நிறுவனத்தில் இருந்து சுமார் 500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் பெறப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களுக்கு இன்று விநியோகம் செய்யப்படவுள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 3,000 மெட்ரிக் டன் யூரியா, 2,700 மெட்ரிக் டன் டிஏபி, 3,200 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், உரங்களை தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






