இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி பாலமுருகன், கேப்ரியல், பேச்சிராஜா ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்துவதற்காக ஒரு லோடு வண்டி வந்துள்ளது. போலீசார் அந்த லோடு வண்டியை நிறுத்த முயன்றபோது, டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த வண்டியை விரட்டிச் சென்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடத்தூர் விலக்கு அருகே மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அந்த லோடு வண்டியை சோதனை செய்தபோது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக லோடு வண்டியின் ஓட்டுநரான முள்ளக்காடு, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அய்யம்பாண்டி மகன் மதியழகன் (வயது 39) மற்றும் முத்தையாபுரம், பொட்டல்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் முருகபிரசாத்(22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டுள்ள பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.






