விருதுநகரில் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கார் கண்ணாடி உடைப்பு

கூட்டத்தை கலைக்கும் வகையில் திமுகவினர் இவ்வாறு செய்வதாக நினைத்த அதிமுகவினர், அந்த காரை அடித்து உடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர்,
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
இதனிடையே, கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல்நிலை சரியில்லாத சிறுவனை, திமுக சேர்மனின் சகோதரர் காரில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டத்தை கலைக்கும் வகையில் திமுகவினர் இவ்வாறு செய்வதாக நினைத்த அதிமுகவினர், அந்த காரை அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, திருச்சி அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.






