மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் பணியிடை நீக்கம்: தண்டனையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - அன்புமணி

நீதிபதி மீதான பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த ப.உ. செம்மலுக்குரிய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல் அவரை பணி நீக்கியிருப்பது அநீதியானது ஆகும்.
நீதி வழங்கும் முறையின் அடிப்படையே எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் இரு தரப்பையும் விசாரித்து நீதி வழங்குவது தான். ஆனால், மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தரப்பு நியாயத்தையும், விளக்கத்தையும் கோராமல் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிக்கு தண்டனையாக அமைந்து விடும்.
எனவே, அவர் மீதான பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அவர் வழக்கம் போலவே மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக கடமை ஆற்றுவதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






