நாளை தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்; தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை


நாளை தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்; தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 22 Dec 2025 6:44 PM IST (Updated: 22 Dec 2025 7:08 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக - பாஜக தொகுதிப்பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

இந்தநிலையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயல் நாளை சென்னை வர உள்ளார். சென்னை வரும் அவர் தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரம், புதிய கட்சிகளை கூட்டணிக்கு வரவைப்பது குறித்து பாஜக நிர்வாகிகளுடம் ஆலோசனை நடத்துவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பியூஷ் கோயலுக்கு நாளை தனது வீட்டில் விருந்தளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சென்னை பசுமை வழிசாலை இல்லத்தில் விருந்தளித்து உபசரிக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் கவர்னர் ஆர்.என்.ரவியையும் சந்திக்க உள்ளார். நாளை மதியம் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கோயல் மாலை கவர்னரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story