காரைக்கால் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையின் தொடர் கைதால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
காரைக்கால்,
தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்களையும், 30-ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த 3 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச எல்லையை கடந்து மீன் பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையின கைது செய்தனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.






