கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு, கடந்த அக். 13ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கினை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் விரைவில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com