நெல்லை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

கோப்புப்படம்
போலீசார் விசாரணயில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்தவர் ஹசன் அபுபக்கர். இவர் மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தாளாளராக இருந்து வருகிறார். இவருடைய மகன் ரபீக் (39 வயது). இவர் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ரபீக், 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதோடு, சாக்லெட் வாங்கி சாப்பிடுமாறு பணம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தார். அவர்கள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ரபீக் மாணவிக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து ரபீக் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அதிரடியாக கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.






