பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்: எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்: எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார். தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த கூட்டம் முடிந்தவுடன் அவர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அப்போது அவர், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்கிறார். மாலை கவர்னர் ஆர்.என்.ரவி பியூஷ் கோயல் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com