பீகார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு காரணம்... சீமான் பரபரப்பு பேட்டி

தமிழகத்திலும் இஸ்லாமிய வாக்குகள் நீக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை,
பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளை வென்றுள்ளது. அவற்றில், பா.ஜ.க. 89 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் வென்றுள்ளது. மத்திய மந்திரி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19, மத்திய மந்திரி ஜீதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஜ்ய சபை எம்.பி. உபேந்திரா குஷ்வஹாவின் ராஷ்டீரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி உள்ளன.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு எஸ்.ஐ.ஆர்.தான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். பீகாரில் என்.டி.ஏ. வெற்றி பெற வாக்காளர் பட்டியல் திருத்தம்தான் காரணம் என கூறிய அவர், தேர்தல் நேரத்தில் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். மேற்கொள்வது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது மகிழ்ச்சிதான். ஏனெனில் காங்கிரஸ் கட்சி காமராஜர் காலத்தில் இருந்ததுபோன்று இல்லை. அது வெறும் கம்பெனி மட்டும்தான் என்று கூறினார்.
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் படித்தவர்களே குழம்பும் அளவிற்கு உள்ளது. எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்ப்பது போல், மறைமுகமாக தி.மு.க. ஆதரிக்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். தமிழகத்திலும் இஸ்லாமிய வாக்குகள் நீக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது.






