சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சபரிமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டும் 16.11.2025 முதல் 16.01.2026 வரையில் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பஸ்கள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2025 முதல் 30.12.2025 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2025 முதல் 29.12.2025 வரை இச்சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.)
இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.
மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பஸ்களுக்கு Online மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பஸ்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






