திருநெல்வேலி: பெண் கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

களக்காடு பகுதியில் பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணை, முதியவர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடந்த 2022-ம் ஆண்டு பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக களக்காடு, கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, களக்காடு, ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நவசிக்கனி (வயது 63) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, நாங்குநேரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளியான தவசிக்கனிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, சார்பு நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் நேற்று தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு:
IPC 307-ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம், IPC 506(2)-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, IPC 341-ன்படி 1 மாதம் சிறை தண்டனையை நீதிபதி வழங்கினார். மேற்சொன்ன குற்றச்சாட்டுகளின் கீழ் விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை ஏக காலத்தில் (concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் (தற்போது உதவி ஆணையர், திருநெல்வேலி மாநகரம்), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜேம்ஸ் பால் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் இதுவரை 13 கொலை முயற்சி வழக்குகளில், சம்பந்தப்பட்ட 20 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் 1 குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. இதில் 2 குற்றவாளிகள் சரித்திர பதிவேடு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.






