இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Sept 2025 8:30 PM IST
கரூரில் விஜய் பிரசாரம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வு
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் கரூர் மாவட்ட தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர். நெரிசல் ஏற்பட்ட இடம், வாகனங்கள் வந்த இடங்களில் 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
- 28 Sept 2025 8:27 PM IST
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
ஒரு திரைப்பட நட்சத்திரமோ, கிரிக்கெட் வீரரோ அவர்கள் என்ன கூறுகிறார்கள் என கேட்கும் ஆவலுடன், ஒரு மனவுறுதியுடன் மக்கள் செல்கின்றனர்.
அவர்கள் நமக்கும் நட்சத்திரங்கள்தான். ஆனால் அதுபோன்ற இடங்களில், குறிப்பிட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விசயம் ஆகும் என கூறினார்.
இதற்காக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் மிக கடுமையான நெறிமுறைகளை வகுக்க முன்வர வேண்டும் என நான் உண்மையாக கேட்டு கொள்கிறேன். அதனால், இதுபோன்ற கொடூர கூட்ட நெரிசல் ஏற்படாமல், தேவையற்ற பாதிப்புகளும் தவிர்க்கப்படும் என்று கூறினார்.
- 28 Sept 2025 7:59 PM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
- 28 Sept 2025 7:37 PM IST
கரூர் சம்பவம்: சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை: கனிமொழி எம்.பி.
கரூரில் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர், நான் அரசியல் பேச விரும்பவில்லை. யார் மீது பழிபோடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை. அப்படி நினைத்திருந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு 1 மணிக்கு இங்கு வந்திருக்க மாட்டார். எங்கள் பிரதிநிதிகள் இங்கே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டார்கள்.
இதில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; யார் கட்சி என்பதெல்லாம் இங்கு தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது, முதல்-அமைச்சரின் பொறுப்பு. அரசியல் காழ்ப்போடு, கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது என்றார்.
- 28 Sept 2025 6:57 PM IST
காசாவில் 140 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பாதுகாப்பு படை
இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன. பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.
காசாவில் 140 பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
- 28 Sept 2025 6:41 PM IST
உ.பி. பதிவு எண்... நடிகர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற மர்ம கார் - போலீசார் விசாரணை
அந்த காரில் இருந்த நபர் தனது குடும்பத்தினர் நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அதனால் அவரை பின்தொடர்ந்து வேகமாக வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த கார் உத்தரபிரதேச மாநில பதிவு எண்ணை கொண்டு இருந்தது. இதுகுறித்து விமானநிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 28 Sept 2025 6:21 PM IST
நவராத்திரி விழா; ராவணனுக்கு பதில் சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பதற்கு கோர்ட்டு தடை
மத்திய பிரதேச ஐகோர்ட்டில் சோனத்தின் தாயார் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், அவருடைய மகளின் வழக்கு விசாரணை நிலையில் உள்ளது. அவரை எந்தவொரு கோர்ட்டும் குற்றவாளி என கூறவில்லை. பொதுவெளியில் சோனத்தின் உருவ பொம்மையை எரிப்பது என்பது அவதூறு ஏற்படுத்துவதுடன், மனதவில் துன்புறுத்தும் செயலாகும் என தெரிவிக்கப்பட்டு இருத்து.
இதுபற்றி குறிப்பிட்ட கோர்ட்டு, ஒருவர் குற்ற வழக்கை எதிர்கொள்கிறார் என்றாலும், அவர்களுடைய உருவ பொம்மையை எரிப்பது, அவர்களுடைய நன்மதிப்பை கெடுப்பது என்பது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டது.
ஜனநாயகத்தில் இதுபோன்ற தண்டனை முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்றும் அதுபற்றிய உத்தரவில் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
- 28 Sept 2025 6:18 PM IST
கரூர் சம்பவம்: எஸ்.பி, ஆட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை
3 மணி முதல் 10 மணிக்குள் வருவார் என அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்சி தலைவர் வரவில்லை என்றால் பிரசாரம் செய்ய அனுமதிக்காதீர்கள். விஜய் பிரசார பயணத்தின் வடிவமைப்பில் கோளாறு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டும். கரூர் மாவட்ட பாஜக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- 28 Sept 2025 5:42 PM IST
4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Sept 2025 5:38 PM IST
கரூர் துயர சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் அருணா ஜெகதீசன் நேரில் ஆய்வு\
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
















