ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்: சென்சார் போர்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்


ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்: சென்சார் போர்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 9 Jan 2026 8:10 PM IST (Updated: 10 Jan 2026 6:54 AM IST)
t-max-icont-min-icon

சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த உத்தரவில், "ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் அதிகார வரம்பை தணிக்கை வாரிய தலைவர் மீறியுள்ளார். தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை ஜனநாயகன் படக்குழு மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது.

ஆவணங்களை ஆய்வு செய்த போது புகார்தாரரின் குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது என்பது தெரிகிறது. எனவே ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்கிறேன். படத்திற்கு உடனடியாக யு/ஏ என குறிப்பிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த நிலையில் தனி நீதிபதி பி.டி.ஆஷா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "ஜனநாயகன் பட விவகார வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில் உடனடியாக சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்யக் கோராத நிலையில், அந்த உத்தரவும் ரத்தாகியுள்ளது. டிசம்பர் 22-ந்தேதியே தணிக்கை முடிவு தெரிவிக்கப்பட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர தாமதம் ஏன்?" என்று வாதிட்டார்.

இந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பு வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன்? தணிக்கை சான்றிதழே இல்லாமல் எப்படி திரைப்படத்தை வெளியிட முடியும் என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்துவிட்டு கோர்ட்டுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்திற்கு செயல்பட வேண்டுமா? பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதன் மூலம் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவராது.

இந்த நிலையில், சென்சார் போர்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்! “ என கூறியுள்ளார்.

1 More update

Next Story