நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்

2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாநகரத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் 2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு திருநெல்வேலி மாநகரத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை 9.11.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை (10 மணி முதல் 12.40 மணி வரை) நடைபெற உள்ளது. இதில் 3,299 ஆண்கள் மற்றும் 1,080 பெண்கள் என மொத்தம் 4,379 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுத வருபவர்கள் நாளை (9.11.2025) காலை 8 மணி முதல் தேர்வு மையத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காலை 9.30 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் அவர்களது தேர்வுமைய நுழைவு சீட்டு, அடையாள அட்டை மற்றும் கருப்பு நிற பந்துமுனை பேனா (Black colour Ballpoint Pen) ஆகியவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு பாதுகாப்பு பணிக்காக 6 தேர்வு மையங்களில் 6 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் மொத்தம் 351 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.






