“நாளை காலை முதல் சென்னையில் மழை தொடங்கும்” - வெளியான முக்கிய தகவல்

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மேற்கு–வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த சூழலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும் என்றும், அது சென்னைக்கு 720 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 790 கிமீ தெற்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிற்கு 780 கிமீ தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்றும், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாக உள்ள 'மோந்தா' புயல் காரணமாக நாளை காலை முதல் சென்னையில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.






