காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்த தாழ்வு மண்டலம்.. அடுத்துவரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புள்ளதா..?

கோப்புப்படம்
தமிழ்நாட்டில் டிட்வா புயல் டெல்டா, தென் மற்றும் வடமாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல், கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து சென்று மழையை கொடுத்து இருக்கிறது. இந்த புயல் உருவாவதற்கு முன்னதாகவே இது காற்று பாதிப்பை ஏற்படுத்தாமல், பரவலாக நல்ல மழையை கொடுக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, இது நல்ல மழையை கொடுத்த புயலாகவே இருந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 29-ந் தேதி தமிழகப் பகுதிகளுக்குள் நுழைந்து மழையை கொடுக்கத் தொடங்கியது. புயலின் மையப் பகுதிகளுக்குள் திடீரென நுழைந்த வறண்ட காற்று ஊடுருவலால், எதிர்பார்த்த மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு மழையை கொடுக்கும் நிகழ்வாக இருந்தது.
ஆனால் வட மாவட்டங்களில் இந்த புயல் பெரிய ஏமாற்றத்தை கடந்த மாதம் 30-ந் தேதி கொடுத்தது. அதிகனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டு, வறண்ட காற்றின் ஊடுருவலால் அன்றைய தினம் மழை பொய்த்து போனது. இதன்படி டிட்வா புயல் செயலற்ற நிலையில் சென்னைக்கு அருகே வலுவிழக்க தொடங்கியது. இதனையடுத்து டெல்டா, தென் மாவட்டங்களில் பெய்த மழைகூட வட மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்யவில்லையே என பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில், வலுவிழந்து சென்னை கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தஞ்சம் அடைந்திருந்த டிட்வா புயல், மேற்கத்திய தாழ்வுநிலையில் இருந்து அதாவது, இமயமலையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றை ஈர்த்து வலுவான மேகக்கூட்டங்களை உருவாக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் இருந்து தன்னுடைய மழை ஆட்டத்தை மீண்டும் தொடங்கியது.
சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்திலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்துள்ளது.
இப்படியாக வட மாவட்டங்களிலும் டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18 மணி நேரத்துக்கும் மேலாக நிலைகொண்டு, மழையை கொட்டியது. இதனால் சென்னையிலும், புறநகர் பகுதிகளில் சில இடங்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
நேற்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழையை கொடுத்தபடியே இருந்தது. பின்னர், சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வுப் பகுதியாகவும் வலுகுறைந்து போனது.
அடுத்துவரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புள்ளதா..?
‘டிட்வா' புயல் வலுவிழந்து போன நிலையில், அடுத்துவரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “புயல் கரையை கடந்த நிலையில், அடுத்ததாக கிழக்கு திசை காற்றின் ஊடுருவல் ஆரம்பித்துவிடும். இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அதிகாலை மற்றும் காலையிலும், உள்மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) வரை மழை தொடரும். அதன் பின்னர் சிறிய இடைவெளி ஏற்படும். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். இந்த பருவமழை காலத்தில் டிசம்பர் மாதத்திலும் நல்ல மழை இருக்கிறது” என்று அவர் கூறினார்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






