தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரதா சாகு தகவல்


தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரதா சாகு தகவல்
x
தினத்தந்தி 4 April 2024 11:37 AM GMT (Updated: 4 April 2024 12:09 PM GMT)

தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 18ம் தேதிக்குள் தபால் வாக்குகளை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளை வாங்க முதல்முறை வீடுகளுக்கு செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால், இரண்டாவது முறை அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வார்கள். இரண்டு முறை மட்டுமே தபால் வாக்கு பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். 'சுவிதா' செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு அனுமதிகளை பெறலாம். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதுதவிர்த்து மற்ற நிகழ்வுகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் பின்பற்றபடுகிறது என்று நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாது. இதுவரை 13.08 லட்சம் பூத் சீலிப் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மார்க் 3 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.ரோடு ஷோ நிகழ்ச்சிகளை, நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story