எதிர்க்கட்சிகளின் மற்றொரு பெயர் ஊழல்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு


எதிர்க்கட்சிகளின் மற்றொரு பெயர் ஊழல்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 16 April 2024 8:18 AM GMT (Updated: 16 April 2024 12:33 PM GMT)

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்த வேலைகளை அடிப்படையாக கொண்டே எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி வாக்குகளை வாங்குகிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

கயா,

பீகாரின் கயா நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று காலை பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜித்தன் ராம் மஞ்சிக்கு ஆதரவு கேட்டு அவர் பேசும்போது, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்.ஜே.டி.) கட்சியால் பீகாரின் நிலைமை மோசமடைந்து உள்ளது.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் 2-வது பெயர் ஊழல் ஆகும். பீகாரின் இந்த மோசமடைந்த நிலைமைக்கு அக்கட்சியே காரணம். பல ஆண்டுகளாக அவர்கள் பீகாரை ஆட்சி செய்தனர். ஆனால், அவர்கள் அரசு செய்த விசயங்களை பற்றி விவாதிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை.

பீகாரில் காட்டாட்சியின் பெரிய உருவம் ஆக ஆர்.ஜே.டி. உள்ளது. அவர்கள் பீகாருக்கு இரண்டு விசயங்களை தந்துள்ளனர். ஒன்று காட்டாட்சி. மற்றொன்று, ஊழல் என பேசியுள்ளார்.

அவர்களுடைய ஆட்சியில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்றவை ஒரு தொழிலாகவே நடந்தன. பெண்கள் இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சமடைந்தனர் என்றார்.

எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய அவர், தொலைநோக்கு பார்வையோ, நம்பிக்கையோ இல்லாத அந்த கூட்டணி, முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்த வேலைகளை அடிப்படையாக கொண்டே வாக்குகளை வாங்குகிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.


Next Story