நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது - பிரதமர் மோடி


தினத்தந்தி 25 April 2024 9:21 AM GMT (Updated: 25 April 2024 9:23 AM GMT)

காங்கிரசுக்கு குடும்பமே முக்கியம், பா.ஜ.க.வுக்கு நாட்டை விட பெரியது எதுவுமில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இங்குள்ள மக்கள் தேசத்தை முதன்மையாக கருதுபவர்களை எப்போதும் ஆதரிப்பர். ஒரு பிரச்சினையில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிட்டால், அதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என மத்திய பிரதேச மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு எதிரான கட்சி. மத்திய பிரதேசத்திற்கு பா.ஜனதா புதிய அடையாளத்தை அளித்துள்ளது. காங்கிரசின் இருண்ட காலகட்டத்தைப் பார்க்கும்போது, பா.ஜனதா ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அதிகம் அனுபவித்து வருகிறோம்.

பா.ஜனதாவுக்கு தேசத்தை விட எதுவும் பெரிது கிடையாது. ஆனால் காங்கிரசுக்கு குடும்பம்தான் முதலில்; நாட்டிற்காக அதிகபட்ச பங்களிப்பையும், கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்பவரை பின்னால் நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை. எனவே, பல ஆண்டுகளாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பா.ஜனதா அரசு அமைந்தவுடன் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தினோம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும். நாட்டு மக்களின் சொத்துகளை எக்ஸ்ரே எடுத்து கணக்கிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மக்களின் சொத்துகளை பறித்து தங்கள் ஓட்டு வங்கிக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. பரம்பரை சொத்துவரி தொடர்பான உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. முன்பெல்லாம் பெற்றோரின் சொத்துகளில் ஒரு பகுதி, குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு, ஒரு பகுதி அரசு எடுத்துக்கொள்ளும்.

ஆனால், சொத்துகள் அரசுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, பரம்பரை சொத்துவரியை ரத்து செய்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சொத்துகளை தக்கவைக்க அவர் பரம்பரை சொத்து வரியை ரத்து செய்தார். தங்கள் சொத்துகளை காப்பாற்றிவிட்டு தற்போது நாட்டு மக்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் பரம்பரை சொத்து வரியை அமல்படுத்த காங்., திட்டமிட்டுள்ளது. நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது. அனைத்து வகை ஆட்டங்களையும் ஆடுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை பறிப்பவர்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

சமீப காலமாக காங்கிரஸ் இளவரசர், மோடியை தினமும் அவமதித்து மகிழ்கிறார். அவர் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார். தயவு செய்து யாரும் வருத்தப்பட வேண்டாம், கோபப்பட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story