தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் விலைவாசி 40% உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் விலைவாசி 40% உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 March 2024 1:09 PM GMT (Updated: 27 March 2024 2:18 PM GMT)

தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க., சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் உயர்ந்த பொறுப்புக்கு வரலாம். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தொண்டர்களும் உயர்ந்த பதவிக்கு வரலாம், ஆனால் தி.மு.க.வில் அப்படி இல்லை.

வாக்குகளை பெறவே கட்சியினரை தன்குடும்பம் என்று கூறி தி.மு.க.,வினரிடம் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தி.மு.க.,வினரை தன் குடும்பம் என்று கூறும் மு.க.ஸ்டாலின் கட்சித்தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?

தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது தி.மு.க. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகளை ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்,தி.மு.க.,. நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க

தி.மு.க ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி 40% உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.4ஆக குறைப்பதாக சொன்னார்கள் ஆனால் குறைக்கவில்லை. மக்களவை ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க வேட்பாளர் குரல் கொடுப்பார்.

தி.மு.க. ஆட்சி நீடித்தால் கடவுளால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. தி.மு.க. ஆட்சியில் காவலருக்கு கூட பாதுகாப்பு இல்லை. சிறுபான்மை மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம்.சிறுபான்மை மக்களுக்கு அரணாக அ.தி.மு.க அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்.

தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்ற வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. மறுமுறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற வில்லை, எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.,வை வெற்றிப்பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story