தேர்தல் விதிகளை நான் மீறவில்லை - அண்ணாமலை விளக்கம்


தேர்தல் விதிகளை நான் மீறவில்லை - அண்ணாமலை விளக்கம்
x
தினத்தந்தி 12 April 2024 12:09 PM GMT (Updated: 12 April 2024 12:17 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தேர்தல் விதியை மீறி 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அந்த பகுதிக்கு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்றனர். அங்கு பா.ஜ.க.வினரிடம் 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்று தி.மு.க.வினர் கூறினர். இதனால் தி.மு.க.வினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

இந்த மோதலில் தி.மு.க.வைச் சேர்ந்த 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நடத்தை விதியை மீறி பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரின் அடிப்படையில் அவர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அண்ணாமலை மீது விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிகளை நான் மீறவில்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "தேர்தல் விதிகளை நான் மீறவில்லை, தேர்தல் விதிகள் எனக்கு நன்றாக தெரியும். இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள். காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க.வினரை, தி.மு.க.வினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது" என்று கூறினார்.


Next Story