ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 54 பவுன் நகைகள், 59 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 54 பவுன் நகைகள், 59 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 6:33 PM GMT)

ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 54 பவுன் நகைகள், 59 செல்போன்களை ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உரியவர்களிடம் வழங்கினார்.

ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினசரி 150–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. பகல் நேரத்தைவிட இரவு நேரங்களில் அதிக அளவு ரெயில்கள் செல்கின்றன. கோவை, பெங்களூர், மைசூர் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறப்படும் ரெயில்கள் ஈரோடு வழியாக சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு சென்று வருகின்றன.

சமீப காலமாக இந்த ரெயில்களில் செல்லும் பயணிகளிடம் இருந்து நகை மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பான புகார்கள் ரெயில்வே போலீஸ் நிலையங்களில் அதிகரித்தன. ஈரோடு, கோவை, சேலம் மற்றும் பல்வேறு ரெயில்நிலைய போலீஸ் நிலையங்களில் பயணிகள் கொடுத்த புகார்கள் அதிகரித்தன. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். அவரது உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள் மற்றும் வழித்தட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கோவை ரெயில்வே போலீஸ் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். கடந்த மே மாதம் 17–ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது ஈரோடு ரெயில்நிலையம் அருகே 4 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களைப்பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அப்போது அவர்கள், 3 மாதங்களுக்கும் மேலாக ரெயில் பயணிகளிடம் இருந்து நகை மற்றும் செல்போன்களை திருடிய கும்பல் என்பது தெரியவந்தது.

அவர்களை விசாரித்தபோது அவர்கள் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மொகல் தாலுகா, தேகவ் கிராமத்தை சேர்ந்த பாலாஜி சங்கர் சின்டே (வயது 50), அதே பகுதியை சேர்ந்த தானாஜி மன்மத் சின்டே (20), சுனில் மன்மத் சின்டே (21), உஸ்மானபாத் மாவட்டம் துல்ஜாப்பூர் சேர்கவு பகுதியை சேர்ந்த பப்பு ஈஸ்வர் பவர்(25) என்பது தெரியவந்தது. இவர்கள் 6 பேர் கொண்ட கும்பல் ஈரோடு, காவிரி ஆர்.எஸ்., மாவேலி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரெயில்களில் துணிகரமாக புகுந்து பயணிகளின் நகைகள் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

அவர்கள் கொடுத்த தகவலின் படி மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதிக்கு சென்ற ரெயில்வே போலீஸ் தனிப்படையினர் அங்கு கொள்ளையர்கள் விற்பனை செய்த தங்க நகைகள், வியாபாரிகள் உருக்கி வைத்திருந்த தங்கம் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். இதுபோல் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை ரெயில்வே போலீஸ் உட்கோட்டத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்த 57 வழக்குகளில் 54 பவுன் நகைகள், 42 செல்போன்களும், சேலம் ரெயில்வே போலீஸ் உட்கோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளில் 17 செல்போன்கள் என மொத்தம் 54 பவுன் நகைகள், 59 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

கோர்ட்டு உத்தரவின்பேரில் அவை உரியவர்களிடம் ஒப்படைப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி நேற்று ஈரோட்டில் நடந்தது. ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரோகித் நாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நகை மற்றும் செல்போன்களை தொலைத்தவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள், தனிப்பிரிவு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழையும் அவர் வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறியதாவது:–

ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன் மூலம் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் 27 பவுன் தங்கம் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டது. அந்த பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் உள்ளனர்.

ஏற்கனவே ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. ரெயில் நிலைய வெளிப்புறங்களில் ரெயில்வே போலீஸ் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. 3 மாதங்களில் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

தற்போது அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் சீருடை மற்றும் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ரெயில்வே பாதுகாப்புப்படையினருடன் இணைந்து இந்த பணி நடைபெறுகிறது. ரெயில் பயணிகளை பொறுத்தவரை திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தால் உடனடியாக எந்த நேரமாக இருந்தாலும் 1512 என்ற இலவச எண்ணுக்கு அழைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம். அதுபோல் ரெயில் பயணிகள் தங்கள் பொருட்களை திருட்டு கொடுத்தது குறித்து பயணத்தில் எப்போது தெரிந்து கொண்டாலும் அடுத்து வரும் ரெயில்நிலைய போலீஸ் அல்லது இறுதியாக இறங்கும் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்யலாம். ரெயிலில் வரும் ரோந்து போலீசாரிடமும் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலமும் புகார்களை பதிவு செய்யலாம். புகார்தாரர்கள் பயணத்தில் பாதிப்பு எதுவும் இல்லாமல் தங்கள் புகார்களை கொடுக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ரெயில் பயணிகள் 1512 என்ற எண் மற்றும் 9962500500 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.


Next Story