பேசும்போது நிதானம் தேவை.. ஆ.ராசாவின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்


பேசும்போது நிதானம் தேவை.. ஆ.ராசாவின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
x

ஆ.ராசா, சுப்ரியா ஸ்ரீனேட்

ஆ.ராசாவின் கருத்துக்களுடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்தார்.

புதுடெல்லி:

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை, இது ஒரு துணைக் கண்டம், என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. ஆ.ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரசும் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்ணியின் அரசியல் செயல்திட்டமாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஆ.ராசாவின் கருத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆ.ராசாவின் கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சுப்ரியா ஸ்ரீனேட் கூறியதாவது:-

ஆ.ராசாவின் கருத்துக்களுடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை. அத்தகைய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைவரையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன்.

இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர், சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன். ராமர் வாழ்க்கையின் லட்சியமாகும். ராமர் என்பது கண்ணியம், ராமர் என்பது நெறிமுறை, ராமர் என்பது அன்பு.

ராசா தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். நான் அதை ஆதரிக்கவில்லை. பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story