காங்கிரசால் முடியாது.. பிராந்திய தலைவர்களால் மட்டுமே பா.ஜ.க.வை தடுக்க முடியும்: பி.ஆர்.எஸ். தலைவர் பரபரப்பு பேச்சு


காங்கிரசால் முடியாது.. பிராந்திய தலைவர்களால் மட்டுமே பா.ஜ.க.வை தடுக்க முடியும்: பி.ஆர்.எஸ். தலைவர் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 26 March 2024 12:07 PM GMT (Updated: 26 March 2024 2:01 PM GMT)

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, பி.ஆர்.எஸ். கட்சியின் நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் முயற்சி செய்ததாக ராமா ராவ் குற்றம்சாட்டினார்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியை தடுக்க வேண்டும் என்றால், கே.சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பிராந்திய தலைவர்களால் மட்டுமே முடியும். பா.ஜ.க.வை தடுக்கும் அளவுக்கு காங்கிரசுக்கு சக்தி இல்லை. நாடு முழுவதும் உள்ள கள நிலவரத்தை பார்த்தால், பா.ஜ.க.வை தடுக்க பிராந்திய தலைவர்களால் மட்டுமே முடியும். காங்கிரஸ் கட்சி தனது பலத்தையும் ஆற்றலையும் இழந்துவிட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, பி.ஆர்.எஸ். கட்சியின் நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. பா.ஜ.க.வின் பி டீம் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. இதுபோன்ற பிரசாரங்களால் சிறுபான்மை மக்களின் மனங்களில் நஞ்சை விதைக்க முயன்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story