கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தாய்-மகன் பரிதாப பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தாய்-மகன் பரிதாப பலி
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தாயும், மகனும் பலியானார்கள்.

பானசவாடி:

பெங்களூரு பானசவாடி பகுதியை சேர்ந்தவர் நரேஷ். இவரது மனைவி அஸ்வினி(வயது 29). இந்த தம்பதிக்கு அஸ்வின் என்ற 7 வயது மகன் இருந்தான். இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அவர்கள் உரமாவு பகுதியில் உள்ள சுரங்க சாலை அருகே சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மகன் அஸ்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் பானசவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த நரேஷ் மற்றும் அவரது மனைவி அஸ்வினியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் அஸ்வினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிவேகமாக வந்த கார் மோதி உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story