வெள்ளி வென்ற சுகாஷ் யத்திராஜ்-க்கு பிரதமர் மோடி, யோகி ஆதியநாத் வாழ்த்து!


வெள்ளி வென்ற சுகாஷ் யத்திராஜ்-க்கு பிரதமர் மோடி, யோகி ஆதியநாத் வாழ்த்து!
x
தினத்தந்தி 5 Sep 2021 3:54 AM GMT (Updated: 5 Sep 2021 3:54 AM GMT)

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ, 

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் விளையாடினார். 20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 17-21 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது.  அதில் பிரான்சு வீரர் லூகாஸ் 15-21 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்படி இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

கர்நாடக மாநில பிறந்தவரான சுகாஷ் யத்திராஜ் 2007ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனையை சுகாஷ் யத்திராஜ் படைத்தார்.   

இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுகாஷ் யத்திராஜ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதியநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “சேவை மற்றும் விளையாட்டுகளின் அருமையான சங்கமம்!  டிஎம்ஜிபி (dmgb)நகர் சுகாஷ் யத்திராஜ் அவர்களின் அசாதாரண விளையாட்டு செயல்திறனால் நமது ஒட்டுமொத்த தேசத்தின் கனவையும் நனவாக்கி உள்ளார். பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டரில், “இன்று டோக்கியோவில் பாராலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் டிஎம்ஜிபி (dmgb)நகர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் விளையாட்டுத் திறமை உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளது. இந்த மறக்க முடியாத சாதனை, முழு நாட்டையும் மகிழ்விக்கும், இது பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். உங்களுக்கு எப்போதும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.





Next Story