எனது பிறந்தநாளுக்கு நேரில் சந்திக்க வருவதை தவிர்க்கவும் - கனிமொழி எம்.பி. வேண்டுகோள்


எனது பிறந்தநாளுக்கு நேரில் சந்திக்க வருவதை தவிர்க்கவும் - கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
x

வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர்.

சென்னை,

வரும் 5-ம் தேதி தி.மு.க மக்களவை உறுப்பினரான கனிமொழியின் பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திக்க வருவதையும், வாழ்த்து பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னை சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.


Next Story