சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு கனமழைக்கு வாய்ப்பு..!!


சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு கனமழைக்கு வாய்ப்பு..!!
x
தினத்தந்தி 7 Jan 2024 4:44 PM GMT (Updated: 7 Jan 2024 5:57 PM GMT)

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழை பெய்ய வாப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோ மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் இன்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு பெய்ய வாப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாகை, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story