திருவொற்றியூரில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் - 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது


திருவொற்றியூரில் தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் - 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது
x

தந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகன், 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

சென்னை

திருவொற்றியூர் ராஜா கடை சிவகங்காபுரத்தை சேர்ந்தவர் அனுராதா (வயது 45). இவருடைய கணவர் பாண்டியன் (48). 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாண்டியன், கழிவறையில் மயங்கி விழுந்தார். பின்னர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில் பாண்டியன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. திருவொற்றியூர் போலீசார் இதனை கொலை வழக்காக பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.

இது தொடர்பாக பாண்டியனின் மனைவி, மகன்களை விசாரித்த போது பாண்டியன் கழிவறையில் விழுந்தபோது யாரும் வீட்டில் இல்லை என்று கூறினர்.

இந்தநிலையில் 2½ ஆண்டுகளாக கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். மீண்டும் அரசு டாக்டர் கோகுலகிருஷ்ணனிடம் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து போலீசார் மேல் முறையீடு செய்தனர். பாண்டியன் கழுத்தை நெரித்த கொலை செய்யப்பட்டதை டாக்டர் மீண்டும் உறுதி செய்தார்.

இதையடுத்து மறுபடியும் போலீசார் பாண்டியனின் மனைவி மற்றும் மகனை தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தனர். அதில் அவருடைய மகனான கூலி வேலை செய்து வரும் ரஞ்சித்குமார் (21) தனது தந்தை பாண்டியன் குடித்து விட்டு வந்து தாயாரிடம் போதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கழிவறையில் மயங்கி விழுந்ததாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.

ரஞ்சித்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story