காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்; பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்; பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x

குறுவை நெற்பயிரைக் காப்பாற்ற காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குறைவான மழை

தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுவதால், குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, அதுவும் கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளன.

பற்றாக்குறை

மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை என்பதோடு, காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை.

இந்த 2023-2024-ம் ஆண்டில், கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.

கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி. தண்ணீரில் 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ள போதிலும், கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி.க்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்நாடி

காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில் ஆகஸ்டு 2-ந் தேதி நிலவரப்படி, 26.6 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதாகவும், இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால் குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய ஜல்சக்தித் துறை மந்திரியிடம் கடந்த ஜூலை 5-ந் தேதி மற்றும் 19-ந் தேதிகளில் இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இதை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்த வலியுறுத்துகிறேன்.

உடனடியாக தலையிடுங்கள்

ஆனாலும், கர்நாடக அரசு இவற்றை கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்துவிட்டது. கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்கு தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது. ஏற்கனவே அரிசி தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நீங்கள் உடனடியாக தலையிட்டு காப்பாற்ற வேண்டும்.

அறிவுரை

சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு நீங்கள் உரிய அறிவுரைகளை வழங்கி, அதை உறுதி செய்வதற்கு தேவையான அறிவுரைகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story