தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன் - நாம் தமிழர் சீமான்


தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன் - நாம் தமிழர் சீமான்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:23 PM GMT (Updated: 13 Feb 2023 12:24 PM GMT)

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று கூறினார்.

ஈரோடு,

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். அவருடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது' என்று கூறினார். பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, பழ.நெடுமாறனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான்,

என் தம்பி சின்னவன் பால சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச்சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன்.

தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிராபகன். போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பிரபாகரன் 15 ஆண்டுகள் பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கி இருப்பார்... எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா?

சொல்லிவிட்டு வருவபர் அல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன்... வந்துவிட்டு சொல்வார். அது தான் அவருக்கு பழக்கம் அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் பிரபாகரன். அதனால் தேவையின்றி குழப்பிக்கொண்டிருக்கவேண்டியதல்ல.

பிரபாகரன் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று பழநெடுமாறன் கூறுகிறார். தோன்றும்போது பேசுவோம்.

அன்பழகன் சொல்வது போல் எங்கள் தலைவர் பிரபாகரன் ஒருநாள் நேரில் வந்துவிட்டால் வந்ததில் இருந்து பேசுவோம்' என்றார்.


Next Story