'எந்த பிரச்சினையையும் சந்திக்க தயார்' - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் இன்றைக்கு மட்டுமல்ல, இனி என்றைக்குமே கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, பாஜகவுடனான கூட்டணியை முறித்த அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியது. மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, பாஜகவுடன் இன்றைக்கு மட்டுமல்ல, இனி என்றைக்குமே கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. பாஜகவுடனான கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயார்' என்றார்.