சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை: கணவன் கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண்


சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை: கணவன் கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண்
x

ராயபுரத்தில் குடித்து விட்டு வந்து சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவனை கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை

ராயபுரம் சோமு செட்டி தெருவில் வசித்து வருபவர் சரவணன் (வயது 40). இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு திவ்வியபாரதி (17), தனலட்சுமி, (16) சூர்யா (14) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். சரவணன் ராயபுரம் எம்.சி. ரோட்டில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. நேற்று காலை குடிபோதையில் இருந்த சரவணன் மனைவி முத்துலட்சுமியிடம் தஞ்சாவூரில் உள்ள 'உனது சொத்தை பிரித்து பணத்தை பெற்றுக்கொண்டு வா' என்று கூறி மனைவியை அடித்து துன்புறுத்தி ஆடைகளை கழற்றி வீட்டை விட்டு வெளியே போய் விடு என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி போதையில் இருந்த கணவன் சரவணனை பனியன் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி சரவணன் தம்பி சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணவர் மாரடைப்பால் இறந்துபோனதாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சாமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முத்துலட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது என் கணவர் தஞ்சாவூரில் உள்ள என் சொத்தை விற்று பணத்தை கொண்டு வா என்று வற்புறுத்தி தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்தார். நேற்று அத்துமீறி எனது ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த நான் பனியனால் அவர் கழுத்தை நெரித்தேன். அதில் அவர் இறந்து போனார் என்று போலீசிடம் கூறினார். இந்த சம்பவம் குறித்து காசிமேடு ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் தகராறு செய்த கணவன் கழுத்தை நெரித்து கொன்ற பெண்ணை கைது செய்தனர்.


Next Story