'வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும்' - இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம்


வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் - இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம்
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 13 Oct 2023 6:11 PM GMT (Updated: 13 Oct 2023 7:18 PM GMT)

வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் காசா மீது தொடர் வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 11 லட்சம் பேர் வாழும் வடக்கு காசா பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அனைவரும் வெளியேறுவது சாத்தியமில்லாதது எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. ஏற்கனவே பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ள மக்கள், மேலும் ஒரு பேரிடரில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story