பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.
டெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை தடை விதித்தது. இதையடுத்து, இந்த தடை மாதம்தோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில் அந்த தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய வான்பரப்பிற்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைய அடுத்த மாதம் 24ம் தேதி வரை தடை விதித்து விமான போக்குவரத்து அமைசகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அடுத்த மாதம் 24ம் தேதி வரை பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






