பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு - ராஜ்நாத் சிங் உறுதி

‘செயல்படுவது எனது கடமை, நீங்கள் விரும்புவது நடக்கும்’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்,'பிரதமர் மோடியையும், அவரது பணி ஸ்டைலும் மக்களுக்கு நன்கு தெரியும். அவரது உறுதிப்பாடும், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொண்ட விதத்தையும் மக்கள் அறிவர். எனவே பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது நிச்சயம் நடக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
எனது வீரர்களுடன் இணைந்து உழைப்பதும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதும் ஒரு ராணுவ மந்திரியாக எனது பொறுப்பு எனக்கூறிய ராஜ்நாத் சிங், அப்படி ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதும் எனது பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு முப்படைகள் தயாராகி வரும் சூழலில், ராஜ்நாத் சிங் பேசி உள்ள இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.






