சபரிமலையில் மேல்சாந்தி, தந்திரி சார்பில் நெய் விற்பனை செய்ய தடை

சபரிமலையில் மேல்சாந்தி, தந்திரி சார்பில் நெய் விற்பனை செய்ய கேரள ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரி, மேல் சாந்திகள், மற்றும் பூசாரிகள் ரூ.100 கட்டணத்தில் பாக்கெட்டுகளில் பக்தர்களுக்கு நெய் விற்பனை செய்து வந்தனர்.
இதற்கு எதிராக திருவிதாங்கூர் தேவஸ்தான கமிஷனர் கேரள ஐகோர்ட்டு தேவஸ்தான அமர்வில் மனு செய்தார். அதில், தந்திரி, மேல்சாந்திகள் மற்றும் கீழ் சாந்திகள் சபரிமலையில் பக்தர்களுக்கு நெய் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு விற்பனை செய்ய தந்திரி, மேல்சாந்திகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அமர்வு, நெய் விற்பனைக்கு தடை விதித்ததோடு தந்திரி, மேல்சாந்தி அறைகளில் விற்பனைக்காக பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டுள்ள நெய்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் நெய் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.






