விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற ஐ.டி.ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்


விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற ஐ.டி.ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்
x

சேலத்தை சேர்ந்த இருவருக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பெங்களூரு,

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த மகேஷ்வரி (வயது 39) என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் பிள்ளைகளுடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் கர்நாடகாவில் பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்திலும், மகேஷ்வரி தனியார் வங்கியில் துணை மேலாளராகவும் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே, பாலமுருகன் கடந்த மாதங்களுக்குமுன் ஐ.டி.வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதேவேளை, பாலமுருகன் , மகேஷ்வரி இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. மனைவியின் நடத்தையில் பாலமுருகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாலமுருகனை பிரிந்த மகேஷ்வரி தனது 2 பிள்ளைகளுடன் பெங்களூருவில் ராஜாஜிநகரில் தனியே வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், விவாகரத்து கேட்டு பாலமுருகனுக்கு கோர்ட்டு மூலம் மகேஷ்வரி கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் பெங்களூருவின் ராஜாஜிநகரில் மகேஷ்வரி வசித்து வந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று மாலை 7 மணியளவில் அலுவலக பணிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மகேஷ்வரியை பாலமுருகன் பின் தொடர்ந்துள்ளார். ஆள்நடமாட்டம் இருந்த பகுதியில் நடத்து சென்றுகொண்டிருந்த மகேஷ்வரியை இடைமறித்த பாலமுருகன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மகேஷ்வரியை மீட்ட அப்பகுதியினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு மகேஷ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பாலமுருகன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story