திருநெல்வேலியில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

பாப்பாக்குடி கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்தில், 28.11.2025 அன்று கலிதீர்த்தான்பட்டி ஊரைச் சேர்ந்த குமரேசன் (வயது 31) என்பவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று, பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேற்சொன்ன வாலிபரின் மரணத்திற்கான காரணத்தினை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டதன் பேரில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர புலன் விசாரணையில், இறந்து போன நபருடன் நெருங்கி பழகிய நபர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன நபருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் ராஜசேகர்(29) என்பவருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக, ராஜசேகர் என்பவர் குமரேசனை கொலை செய்த விபரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜசேகரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு சிறு தடயங்களும் இல்லாத நிலையில், சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடனும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திறமையான விசாரணையின் மூலம் கொலை குற்றத்தில் ஈடுபட்ட கொலையாளி கண்டறியப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.






