திருநெல்வேலியில் கஞ்சா விற்றவர் கைது: 1 கிலோ பறிமுதல்

வள்ளியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வள்ளியூர் முத்தாரம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வள்ளியூரை சேர்ந்த ராஜா (வயது 41) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர், ராஜாவை காவல் நிலையம் அழைத்துச் சென்றார். இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராஜாவை நேற்று கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.






