கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அழுது கொண்டே ஆஜரான கொலையாளி சுர்ஜித்

சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெல்லை கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அழுது கொண்டே ஆஜரான கொலையாளி சுர்ஜித்
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மகள் சித்த மருத்துவரான சுபாஷினியை கவின் காதலித்துள்ளார். இது பிடிக்காததால் சுபாஷினி சகோதரர் சுர்ஜித், அவரை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் சுர்ஜித், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் தாயார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. கவின் கொலை செய்யப்பட்ட நாளில் சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு வெயிலாச்சி ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் உலக ராணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், அந்த இடத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கும், சுர்ஜித்தின் அக்கா சுபாஷினி வேலை பார்க்கும் சித்த மருத்துவமனைக்கும் இடையே உள்ள தூரம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.

இதற்கிடையே கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் நெல்லை இரண்டாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருகின்ற 11ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

முன்னதாக கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தில் கொலையாளி சுர்ஜித் அழுது கொண்டே ஆஜரானார். இதனைத் தொடர்ந்து சுர்ஜித் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com