என் அமைதி வெற்றிக்கான அறிகுறி; விரைவில் நன்மை நடக்கும் - செங்கோட்டையன்

எல்லாவற்றுக்கும் விரைவில் நன்மை நடக்கும் என்று செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதயமே வெடித்து விடும் போல் உள்ளது. அரசியல் வரலாற்றில் இதுபோல சம்பவம் நடைபெற்றது இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப ஆசைப்படுகிறேன். வரும் காலங்களில் தமிழக அரசு மற்றும் மக்கள் இது போன்ற துயரங்களை ஏற்படுத்தாமல் இருக்க அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்; அடுத்தக்கட்ட முடிவு பற்றி இன்னும் யோசிக்கவில்லை. தனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் நீக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால், எல்லாவற்றுக்கும் விரைவில் நன்மை நடக்கும். யார் பக்கமும் எந்த ரியாக்ஷனும் இல்லை. என்னுடைய அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி. எடப்பாடி பழனிசாமி தனது பிரசார பயணத்தில் கோபிசெட்டிபாளையம் வழியாக வருகிறார் என எனக்கும் எந்த தகவலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






