எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!

திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
திருச்சி மன்னார்புரம் காஜாநகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கலைவாணி (வயது 35). கலைவாணி பெயரில் திருச்சி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. தற்போது அவர் அந்த வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றார். அப்போது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
இதனையடுத்து கலைவாணி குறிப்பிட்ட வங்கிக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார். அதற்கு வங்கி அதிகாரிகள் ‘அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) ரூ.9 கோடியே 48 லட்சம் நீங்கள் செலுத்த வேண்டியது இருப்பதால், உங்கள் வங்கி கணக்கை முடக்கி வைக்கும்படி எங்களுக்கு நோட்டீசு வந்துள்ளது. இதனால் நாங்கள் வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளோம்’ என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த பதிலை கேட்டு கலைவாணி அதிர்ச்சி அடைந்தார். தொழிலே செய்யாத நான் ஏன் ஜி.எஸ்.டி. வரி கட்டவேண்டும்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் ‘இதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கலைவாணியின் ஆதார் எண், பான் கார்டு, புகைப்படம், அவரது கையெழுத்து மாதிரி ஆகியவற்றை பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் போலியாக நிறுவனம் தொடங்கி வர்த்தகம் செய்திருப்பதும், அவர்கள் ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை செலுத்தாத குற்றத்திற்காக வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.






