திருநெல்வேலி: மின் ஊழியரை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த நபர், டவுண் பகுதியை சேர்ந்த மின் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த ஜேம்ஸ்ராஜ் (வயது 49) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு, டவுண் பகுதியை சேர்ந்த மின் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மின் ஊழியர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து காவல்துறையினர் அடிதடி வழக்காக பதிவு செய்து ஜேம்ஸ்ராஜை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (6.8.2025) நீதித்துறை நடுவர் ஜெய சங்கரகுமாரி குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ்ராஜிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு IPC 294(b)ன்படி மூன்று மாதங்கள் சிறை தண்டனை, IPC 355ன்படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், IPC 353ன்படி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர் மேற்சொன்ன சிறை தண்டனையினை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை துரிதமாக மற்றும் திறம்பட கண்காணிப்பு செய்த டி.எஸ்.பி. ரகுபதிராஜா மற்றும் தாழையூத்து காவல் நிலைய அலுவலர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்குரைஞர் ஏஞ்சல் செல்வராணி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.






