விஜய் கூட்டத்தில் செருப்பு வீசியது யார்? நயினார் நாகேந்திரன் கேள்விக்கு, முதல்-அமைச்சர் பதில்

விஜய் கூட்டத்தில் கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்ததாக சொல்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
சென்னை,
சட்டசபையில் பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், ‘த.வெ.க. தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் செருப்பு வீசியது யார்? அங்கே மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்ததாக சொல்கிறார்கள். அவர் பாடும்போது தான் மின்சாரம் தடைபட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
செருப்பு வீச்சைப் பற்றிச் சொல்கிறார். நானும் டி.வி.யில் பார்த்தேன். நிச்சயமாக திட்டமிட்டு யாரும் செய்ததில்லை. அங்கு தண்ணீர் வேண்டும். அதற்காக கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் செய்யப்பட்டது என்று நான் கருதுகிறேன். எது எப்படி இருந்தாலும் நீங்கள் சொன்ன கருத்தின்படி சி.பி.ஐ. விசாரணை வந்துள்ளது. அதில் எல்லா உண்மைகளும் வெளிவரப்போகிறது. அப்பொழுது தெரியும். இப்பொழுதே இதைப்பேசி நீங்கள் இதை திசை திருப்புவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து கரூர் சம்பவம் தொடர்பாக வெளிநடப்பு செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.






