அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு


அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு
x
தினத்தந்தி 18 March 2024 12:05 PM GMT (Updated: 18 March 2024 12:12 PM GMT)

அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவுபெற்றது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என ஓ.பி,எஸ் கூறியிருந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அ.தி.மு.க. (ஓபிஎஸ்) என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக இதனை வழங்க வேண்டும். வேட்பாளர், சின்னத்தை அங்கீகரித்து கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும்; அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் பொதுச் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story