பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் இருந்து குஷ்பு திடீர் விலகல்


பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் இருந்து குஷ்பு திடீர் விலகல்
x
தினத்தந்தி 7 April 2024 7:34 AM GMT (Updated: 7 April 2024 10:53 AM GMT)

உடல்நலக்குறைவால் தேர்தல் பிரசார பணிகளில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், பா.ஜ.க.,வுக்கான தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி கொள்வதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019ம் ஆண்டில் டெல்லியில் நடந்த விபத்தில் முதுகின் வால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைகள் தொடர்ந்து எடுத்து வருகிறேன். தற்போது தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது. இருப்பினும் டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் பா.ஜ.க. தொண்டராகவும், பிரதமர் மோடியின் ஆதரவாளராகவும் வலி மற்றும் வேதனையை பொருட்படுத்தாமல் என்னால் முடிந்த பிரசாரங்களை செய்தேன். தற்போது நிலைமை மோசமாகி விட்டது.

பிரச்சினையில் இருந்து விடுபட தேவையான நடவடிக்கை எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது உயிருக்கு அச்சுறுத்தலான சிகிச்சை முறையல்ல. இது எனது நல்ல எதிர்க்காலத்துக்கான சிகிச்சை முறை. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்வேன்'' என தெரிவித்துள்ளார்.


Next Story