பா.ஜ.க. தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா? - மம்தா பானர்ஜி கேள்வி


பா.ஜ.க. தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா? - மம்தா பானர்ஜி கேள்வி
x

Image Courtesy: PTI (File Photo)

தினத்தந்தி 15 April 2024 12:30 PM GMT (Updated: 15 April 2024 12:33 PM GMT)

மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட தேர்தல் ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது, "தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல்துறை துணை ஆணையரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது.

நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?" இவ்வாறு அவர் கூறினார்.

அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


Next Story