'காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் வங்காளத்தில் ரத்தம் வழிகிறது' - யோகி ஆதித்யநாத்


காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் வங்காளத்தில் ரத்தம் வழிகிறது - யோகி ஆதித்யநாத்
x

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் மேற்கு வங்காளத்தில் இன்று ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் பிர்பம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தேப்தானு பட்டாச்சாரியாவை ஆதரித்து உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"மேற்கு வங்காள மாநில அரசின் ஆதரவுடன் ஊழல் மற்றும் மாபியா கும்பல்கள் பொதுமக்களிடம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். புரட்சியாளர்களால் 'பொன்மயமான வங்காளம்' என்று வர்ணிக்கப்பட்ட நிலத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளால் இன்று ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.

ராம நவமி ஊர்வலத்தின்போது மோதல்கள் ஏற்பட்டன. உத்தர பிரதேசத்திலும் கடந்த காலத்தில் இதே போன்ற பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில், 7 ஆண்டுகளில் அது அமைதியான மாநிலமாக மாறியுள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது ராம நவமி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள முஸ்லிம் இட ஒதுக்கீடு, நாட்டில் இன்னொடு பிரிவினைக்கு வழிவகுக்கும். மத அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


Next Story